சென்னை: பள்ளிகளை விரைந்து திறக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைவிஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மேலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் சில மாநிலங்களில் நேரடி வகுப்புகள் நடைபெறாமல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் குழந்தைகளின் கற்றல் பாதிப்பை சரிசெய்ய பள்ளிகளை விரைந்து திறக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைவிஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; கொரோனா 3-வது அலையால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதில் உண்மை இல்லை. பள்ளிகள் முழுமையாக அனைத்து வகுப்புகளுக்கும் திறக்கப்படாததால், குழந்தைகளின் கற்றலில் சுமார் 20 மாத காலம் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. கிராமங்கள், மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு தொலைதொடர்பு வசதிகள் இல்லாததால், இணையவழி கல்வி அனைவருக்கும் பயன் அளிக்காது. எனவே, பள்ளிகளை திறப்பது அவசியம். எனவே வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் 68 சதவீத மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. அதனால், கொரோனா 3-வது அலை குறித்த அச்சத்தை மக்கள் தவிர்க்கவேண்டும். முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, கைகழுவுதல், தடுப்பூசி போடுதல்ஆகிய வழிமுறைகளை அடுத்த 6 மாதங்களுக்கு முறையாக பின்பற்றினால் நோய் பரவலை கட்டுக்குள் வைக்க முடியும். 3-வது அலை உருவாவதையும் தடுக்கலாம் எனவும் அறிவுரை வழங்கினார். …
The post பள்ளிகளை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சவுமியா சுவாமிநாதன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.